ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.
பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, நான் பேசுவதை முதல்வர் ஸ்டாலின் உற்று நோக்க வேண்டும். உங்க கோபத்தை என்னிடம் காட்டாதீர்கள், ஆ.ராசா மீது காட்டுங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாக ஆ.ராசாதான் கூறினார், அதையேதான் நானும் வழிமொழிந்தேன். இதில் என் மீது கோபப்பட்டு என்ன பயன்? இதை ராசாவிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து பேசிய அவர், உங்களை ஆளாக்கி, பதவி கொடுத்த தந்தையையே சிறையில் அடைப்பது நியாயமா? கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியே இதைக் கூறுகிறார். ஸ்டாலின் பேசப் பேச இதில் உண்மை இருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். சொந்தத் தந்தைக்கே இந்த நிலை என்றால், நாட்டு மக்களின் நிலை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். அழகிரியை ஒதுக்கிவிட்டீர்கள், கனிமொழியை மாநில அரசுக்குள் வரவிடாமல் தடுத்துவிட்டீர்கள் எனச் சாடினார்.
2021 தேர்தலின் போது இதுதான் தனது கடைசித் தேர்தல் என்று கூறி துரைமுருகன் வாக்கு கேட்டார். ஆனால், இந்த முறையும் அதிக முறை சட்டமன்ற உறுப்பினர் என்ற பெயரைப் பெற வேண்டும் என்பதற்காகப் போட்டியிடுகிறார்" என்று விமர்சித்தார். மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்போம் என்று ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதி என்னவானது என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசின் கடன் சுமை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்துப் பேசிய அவர், கடன் வாங்குவதில் தமிழகம் இன்று முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் தரமில்லாமல் இருந்ததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. திருவண்ணாமலையில் தரம் குறைந்த பாலம் கட்டப்பட்டது குறித்து அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரச்சார உரையில் தெரிவித்தார்.
வாசகர் கருத்துக்கள்