விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து: விதிமீறலுடன் செயல்பட்டதாக தகவல் – உயிரிழப்பு 25 ஆக உயர்வு
விருதுநகர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியோனார் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரு பெண்கள் இறந்துவிட்டனர். காயமடைந்த ஆலைத் தொழிலாளர்கள், தீயணைப்புப் படையின் வீரர்கள் மற்றும் காவலர்கள் என 21 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. முன்புற வராண்டாவில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. மேலும் சில கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகின.
பட்டாசு ஆலை வெடிவிபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,"பட்டாசு ஆலைகளில் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வதே முதல் விதிமீறல்தான்" என்றார். மேலும் ஆலை உரிமம் பெற்றே இயங்கி வந்ததாக கூறிய அவர், வேறு விதிமீறல்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகக் கூறினார்.
விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுவோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்துக்கள்