NDB வங்கி விவகாரம்: பொதுமக்களுக்கு மத்திய வங்கி உறுதி, விசாரணை தீவிரம்
NDB வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகளை விசாரிக்க, வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இந்தத் தணிக்கை மோசடி சம்பவத்தை மட்டுமல்லாது, அது நடந்த காலப்பகுதியில் வங்கியின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை குறைபாடுகள், நிர்வாக பலவீனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் எவ்வாறு சட்டவிரோதமாக நடைபெற்றன என்பதையும் விரிவாக ஆய்வு செய்யும்.
தணிக்கை அறிக்கை நேரடியாக மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதேசமயம், வங்கியின் உள்வாரி கட்டுப்பாடுகளை வலுப்படுத்தவும், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் செயல்திறனை மதிப்பீடு செய்ய சுயாதீன மூன்றாம் தரப்பு ஆய்வை மேற்கொள்ளவும் NDB வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலவும் சர்ச்சையைத் தொடர்ந்து மத்திய வங்கி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. தற்போதைக்கு NDB வங்கி அனைத்து ஒழுங்குமுறை மூலதன மற்றும் திரவத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதால் அதன் ஸ்திரத்தன்மைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், இந்த விவகாரம் காரணமாக பிற நிதி நிறுவனங்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. வதந்திகளை நம்பாமல் இருக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய வங்கி, வைப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் நிதி அமைப்பின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் தேவையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
வாசகர் கருத்துக்கள்