விமான நிலையம் – மாகும்புர இடையிலான சொகுசு பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மாகும்புர பன்முகப் போக்குவரத்து மத்திய நிலையத்திற்கிடையிலான சொகுசு பேருந்து சேவை 2026 ஜூன் 1 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் விரைவான போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கில் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் தேசிய வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இணைந்து இந்த சேவையை முன்னெடுத்து வருகின்றன.
அமைச்சின் தகவலின்படி, பேருந்து சேவை காலை 5.15 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கும் ஒருமுறை இயக்கப்படும். பயணக் கட்டணம் ரூ.410 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், பயண நேரம் சுமார் 50 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் விமான நிலையத்திற்கும் நாட்டின் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கும் இடையிலான இணைப்பு மேலும் வலுப்பெறுவதோடு, சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சிக்கும் சாதகமான பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்துக்கள்